கடந்த மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானதற்குப் பிறகு, அதிமுகவிற்குள் நடந்த அதிர வைக்கும் ரகசியங்களை அக்கட்சியிலிருந்து வெளியேறிய மரகதம் குமரவேல் தற்போது பகிரங்கமாக உடைத்துள்ளார். பாண்டிச்சேரியில் அதிமுகவினர் தங்கியிருந்த சமயத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திமுகவின் ரகசிய ஆதரவைப் பெற்று, அவர்களுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கப் பயங்கரமான ஸ்கெட்ச் போட்டதாக மரகதம் குமரவேல் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

“அதிமுகவின் நிறுவனரான எம்ஜிஆர் எந்த திமுகவை எதிர்த்துப் புதுக் கட்சி தொடங்கினாரோ, அதேபோல சட்டமன்றத்தில் ஜெயலலிதா அம்மாவுக்குத் துரைமுருகன் மூலமாக ஒட்டுமொத்த திமுகவும் சேர்ந்து எவ்வளவு பெரிய இழிவை ஏற்படுத்தியது? அப்படிப்பட்ட துரோகம் செய்த திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி எப்படி கூட்டணி வைக்கத் துணிந்தார்?” என்று அவர் கொதித்துப் பேசியுள்ளார்.

​மேலும் தனது குடும்பப் பின்னணியை உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்ட மரகதம் குமரவேல், “ராமாபுரம் தோட்டத்தில் எனது தந்தை பணிபுரிந்ததால், அங்கேயே வளர்ந்தவள் நான்; எனக்கு ‘மரகதம்’ என்று பெயர் சூட்டியதே சாட்சாத் நம்ம புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தான்” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

அப்படிப்பட்ட பாரம்பரியமிக்க தனக்கு, எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் எதிர்த்த அதே திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி கைகோர்க்க முயன்ற துரோகத்தைக் கேட்டதும் ரத்த நாளங்கள் எல்லாம் சூடாகிவிட்டதாகக் கூறியுள்ளார். இந்த அநியாயத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் அதிமுகவை விட்டு வெளியேறி, தற்போது தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்ததாக மரகதம் குமரவேல் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.