ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என பாமக தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பாமக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், அது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்நிலைக் குழு கட்சியின் நிறுவனர் மருத்துவர் ஐயா அவர்கள் தலைமையில் கூடி விவாதித்தது. கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட உயர் நிலை குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இடைத்தேர்தல்கள் தேவையற்றவை, மக்களின் வரிப்பணத்தையும் நேரத்தையும் வீணடிப்பவை, அதனால் தான் சட்டமன்ற உறுப்பினர் காலமானதாலோ, கட்சி தாவியதாலோ சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியானால் அங்கு இடைத்தேர்தல் நடத்த தேவையில்லை. அங்கு பொதுத்தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றதோ அதே கட்சியை சேர்ந்த ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக்கி விடலாம் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு.

இதையே பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அதன்படியே ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடுவதில்லை எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்று உயர்நிலை குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.