கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது. இந்தத் தொகுதியின் வேட்பு மனு ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 7-ஆம் தேதி நிறைவு பெற்றது. திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

அதன்பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அதிமுகவின் கே.எஸ் தென்னரசு அறிவிக்கப்பட்டார். தேசிய முற்போக்கு திராவிட கழகம் வேட்பாளராக ஆனந்தும், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேகனா நவநீதனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். சுயேச்சை உள்ளிட்ட வேட்பாளர்கள் சேர்த்து மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவு பணியில் 1206 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேமுதிக கட்சியின் வேட்பாளர் கே.எஸ் தென்னரசு பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்களித்துள்ளார். அதன் பிறகு கே.எஸ் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நான் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்று கூறினார். அதன் பிறகு விரலில் வைக்கப்படும் மை அழியவில்லை என்று கூறினார். ஈரோட்டில் எப்போதும் நாகரிகமான அரசியல் தான் செய்யப்படும். எந்த கட்சியாக இருந்தாலும் அனாவசியமான கடுஞ்சொற்களை சொல்ல மாட்டார்கள். எப்போதும் நாகரிகமாக நடப்போம். வாக்காளர்களை வேகமாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அதிமுக சார்பில் விரலில் வைக்கப்படும் மை அழிவதாக தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்த நிலையில் தற்போது அதிமுக வேட்பாளர் விரலில் வைக்கப்படும் மை அழியவில்லை என்று கூறியுள்ளார்.