தமிழ் சினிமாவின் இயக்குனரும் நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவர் கல்லீரல் பிரச்சனையால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து வீடு திரும்பினார். அதன் பிறகு இவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட கடந்த 15 நாட்களாக வீட்டில் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரின் இறப்பு ஒட்டுமொத்த திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மனோபாலாவின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைப்பட இயக்குனரும் நடிகருமான மனோபாலா அவர்கள் உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரின் மறைவு தமிழ் சினிமாவிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. சமீபத்தில் என் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு மனோபாலா பாராட்டியது என் நெஞ்சில் நிழலாடுகிறது. மனோபாலாவை பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தினர், திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.