சென்னையில் உள்ள 82 ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்..

சமையலுக்கு அத்தியாவசியமான காய்கறிகளில் ஒன்று வெங்காயம் மற்றும் தக்காளி. இந்த காய்கறிகள் இல்லாமல் சமைப்பது மிகவும் கடினம். தக்காளி, வெங்காயம் விலை உயர்ந்தால் பொதுமக்களும், ஓட்டல்காரர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.

அதன்படி, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கிலோ 40 ரூபாயாக இருந்த தக்காளி விலை படிப்படியாக அதிகரித்து தற்போது 130 ரூபாயை தொட்டுள்ளது. தக்காளி விலை கிலோ ரூ.130 ஆக உயர்ந்துள்ளதால், அதை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் கூட்டுறவு சங்கப் பதிவாளர்களுடன் அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. ரேஷன் கடைகளில் தக்காளி விற்பது குறித்து கருத்து தெரிவிக்கையில், அது சாத்தியமா? நடைமுறை சிக்கல்கள் என்ன? என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன் :

குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கொள்முதலை அதிகரித்துள்ளோம். 10 நாட்களுக்கு தக்காளி விலை குறைய வாய்ப்பில்லாததால், சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் நாளை (இன்று) முதல் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை என 3 ஆக பிரிக்கப்பட்ட 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக தக்காளி கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளோம். சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் தக்காளி தேவையை பூர்த்தி செய்கிறது.

விலைவாசி உயர்வை தடுக்கவும், விலையை குறைக்கவும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் பேசியுள்ளோம். 10 நாட்கள் நீடிக்கும் என்று கூறியுள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் விலைவாசி உயர்வு உள்ளது. பருவமழை பொய்த்ததாலும், உரிய விலை கிடைக்காததாலும் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.தக்காளி பதுக்கல் இல்லை. அது குறைவாகவே வருகிறது. தமிழகம் முழுவதும் மொத்தம் 111 கடைகளில், மையங்களில்  தக்காளி விற்பனை செய்யப்படும். ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் தக்காளி விலை இப்படி உயர்ந்து வருகிறது. அடுத்த ஆண்டு தக்காளி விலை உயராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.”என்று கூறினார்.