ராஜஸ்தான் மாநிலம் தௌல்பூர் மாவட்டத்தில் உள்ள பூரா புரா கிராமத்தில், கணவன் தன் மனைவியைச் சந்தேகத்தின் பெயரில் இரும்புத் தடியால் அடித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 35 வயதான மதுரா என்பவருக்கும் தினேஷ் குஷ்வாஹா என்பவருக்கும் 2011-ல் திருமணம் நடைபெற்றது.

ஆரம்பத்தில் நன்றாக இருந்த இவர்களது வாழ்க்கையில், கடந்த சில ஆண்டுகளாக மதுராவின் நடத்தையில் சந்தேகமடைந்த தினேஷ், மதுராவைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். ஏப்ரல் 15-ஆம் தேதி இரவு, மதுபானம் குடித்துவிட்டு வந்த தினேஷ், தூங்கிக் கொண்டிருந்த மனைவியை எழுப்பித் தகராறு செய்து, ஆத்திரத்தில் இரும்புத் தடி மற்றும் தடியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

இந்தக் கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு, காயமடைந்த மனைவியையும் அழுது கொண்டிருந்த மூன்று குழந்தைகளையும் அப்படியே விட்டுவிட்டு தினேஷ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். உறவினர்கள் மதுராவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அங்கிருந்த உடைந்த வளையல்கள் மற்றும் ரத்தக் கறைகளை ஆதாரமாகச் சேகரித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள தினேஷைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தாயை இழந்து வாடும் குழந்தைகளின் நிலை அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.