அகமதாபாத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நியூஸிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துள்ளது. இந்த அபார வெற்றியை உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், இந்தியாவின் வெற்றியை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்தர், “இந்தியா ஒரு பணக்காரக் குழந்தை போல, எல்லா பலவீனமான அணிகளையும் அழைத்து வந்து விளையாடுகிறது” என்று தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இந்தியா கிரிக்கெட் விளையாட்டைச் சீரழிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரிடம், “எந்தவொரு பந்தாவது பேட்ஸ்மேனைத் தாக்கியதைப் பார்த்தீர்களா?” என்று கிண்டலாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ள நிலையில், இந்தியாவின் அசைக்க முடியாத ஆதிக்கத்தைக் கண்டு அக்தர் பொறாமையில் இவ்வாறு பேசுவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் செயல்பாட்டை அவர் பாராட்டத் தவறவில்லை. தோல்விகளின் போதும் தனது வீரர்களுக்கு உறுதுணையாக நின்ற கம்பீரின் தலைமைப் பண்புதான் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் என்றும் அவர் ஒப்புக்கொண்டார். மேலும் அணியில் சரியான முறையில் வாய்ப்பு கிடைக்காத போதும் சஞ்சு கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி கொண்டதாகவும் ஒழுக்கம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்ட இஷான் கிஷன் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றதாகவும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.