ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சுரங்க நிறுவனமான ரியோ டிண்டோ பல்வேறு இடங்களில் நிலக்கரி உட்பட கனிமங்கள் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சுரங்க பணியின் போது கனிமத்தின் தன்மையை அளவிடும் கருவியில் சிறிய அளவிலான கதிரியக்க குப்பி பயன்படுத்தப்படுகிறது. அந்த குப்பியில் சிறிய அளவில் சீசியம் 137 என்ற தனிமம் உள்ளது. அந்த தனிமம் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும். அது மனிதர்கள் பிற உயிரினங்களில் தோலில் பட்டால் பாதிப்பு மட்டுமல்லாமல் தீக்காயமும் ஏற்படக்கூடும்.

இந்த கதிரியக்க குப்பியில் இருந்து கதிர் இயக்கம் வெளியேறினால் கேன்சர் கூட வருவதற்கான ஆபத்து உள்ளது. இது ஒரு நாணய அளவிலேயே இருக்கிறது. இந்நிலையில் கடந்த மாதம் 12-ஆம் தேதி மேற்கு ஆஸ்திரேலியாவின் பில்பெராவில் சுரங்க பகுதியில் இருந்து கதிரியக்க குப்பிகள் உட்பட பொருட்களை ஏற்றிக்கொண்டு 1,400 கிலோ மீட்டர் தொலைவில் வந்த வடமேற்கு நகரில் உள்ள ரியோ டிண்டோ கனிம நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கிற்கு லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது பொருட்கள் இறக்கி வைக்கப்பட்ட நிலையில் பொருட்களை பிரித்து பார்க்கும் பணியில் கடந்த 25-ஆம் தேதி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது ஒரு கதிரியக்க குப்பி மாயமானது.

இந்த குப்பி  ஆபத்தை விளைவிக்கக் கூடிய கதிரியக்க குப்பி என்ற காரணத்தினால் நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து மிகப்பெரிய அளவில் தேடுதல் நடத்தப்பட்டது. அது தீவிர தேடுதலுக்கு பின் இன்று அந்த குப்பி  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குப்பியை கைப்பற்றிய மீட்பு குழுவினர் அதனை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று உள்ளனர். இந்த கதிரியக்க குப்பியால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.