தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்து தமிழக சட்டசபையில் கடந்த வருடம் அக்டோபர் 19-ஆம் தேதி அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதன்பின் இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த வருடம் அக்டோபர் 28ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.பல தினங்களாக கிடப்பில் போடப்பட்ட அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென்று தமிழக அரசுக்கு திருப்பியனுப்பினார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரும் தங்களது கண்டனத்தினை தெரிவித்தனர்.

இந்த முறை ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசுக்கு இல்லாத அதிகாரம், ஆளுநருக்கு எப்படி வருகிறது? 8 கோடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசு மக்கள் நலன் சார்ந்த சட்டத்தை கொண்டு வரும்போது அதை ஏற்க முடியாது, ஒப்புதல் அளிக்க முடியாது என்று கூறுவதற்கு ஆளுநர் யார்? எல்லாம் கொடுமை என்று சீமான் தெரிவித்தார்.