உத்தரப்பிரதேச மாநிலம் முராதாபாத் நகரில், பெற்ற தாயே தனது குழந்தையைக் கைவிட்டு காதலனுடன் ஓடிய அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஜோலா பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் காஷ்யப் என்பவரின் மனைவி தீபா, ஜூன் 15 ஆம் தேதி அன்று தனது 14 மாதக் குழந்தை திருஷ்டியை பக்கத்து வீட்டுக்காரர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

மேலும் தனது ஆதார் அட்டையைத் திருத்தச் செல்வதாகக் கூறிச் சென்ற அவர், அதன்பின் வீடு திரும்பவில்லை. விசாரணையில், அவர் தேவேந்திர சைனி என்ற நபருடன் வீட்டை விட்டு ஓடிவிட்டது தெரியவந்தது. வெறும் குழந்தையை மட்டும் விட்டுச் செல்லாமல், தீபா வீட்டில் இருந்த விலைமதிப்பற்ற தங்க நகைகளையும், பணத்தையும் திருடிச் சென்றுள்ளார்.

மேலும் கொடுமையாக, தனது பிஞ்சு மகளுக்காகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த உண்டியலையும் உடைத்து, அதில் இருந்த சுமார் 45,000 ரூபாய் பணத்தையும் எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் ஆகாஷ், தனது குழந்தையுடன் முராதாபாத் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.