சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் கண்ணன் தெருவில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேளாங்கண்ணி(47) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வேளாங்கண்ணி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் வேளாங்கண்ணியின் தம்பி யுவராஜின் மகன் அகஸ்டின் அருண்(21), அவரது நண்பர் சாலமன்(22) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது அகஸ்டின் அருணுக்கு தனது சொந்த அத்தை மீது ஆசை வந்தது. இதனால் அவரது நண்பர் சாலமனுடன் வேளாங்கண்ணியின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சாலமனை வெளியே உட்கார வைத்துவிட்டு அருண் மட்டும் வீட்டிற்குள் சென்று வேளாங்கண்ணியிடம் தனது ஆசைக்கு இணங்குமாறு கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வேளாங்கண்ணி எனது தம்பி மகன் நீயே இப்படி நடந்து கொள்கிறாயே என கண்டித்தார்.

அதன் பிறகும் விடாமல் அருண் ஆசைக்கு இணங்குமாறு அவரை வற்புறுத்தியுள்ளார். அதற்கு வேளாங்கண்ணி மறுப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் வெளியே யாரிடமாவது சொல்லி விடுவாரோ என்ற அச்சத்தில் அருண் தனது அத்தையின் தலையை முடியை பிடித்து இழுத்து சுவர் மற்றும் தரையில் முட்டி கொலை செய்துள்ளார். பின்னர் ஒன்றும் தெரியாதது போல நண்பருடன் தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.