தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் நெஞ்சை உலுக்கும் அதிரடிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சைஃபாபாத் பகுதியில் உள்ள விஐபி-க்கள் நடமாடும் தலைமைச் செயலக பேருந்து நிலையம் அருகே 10 வயது சிறுவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக சாலையோர மழைநீர் வடிகால் மூடியின் இரும்பு கம்பிகளுக்கு இடையே அச்சிறுவனின் கால் அநியாயமாகச் சிக்கிக் கொண்டது.

மேலும் கம்பிகள் காலை இறுக்க, வலியால் அந்தப் பிஞ்சு குழந்தை போட்ட அலறல் சத்தம் கேட்டு, பேருந்து நிலையமே கிடுகிடுத்தது. பொதுமக்கள் எவ்வளவு முயன்றும் காலை வெளியில் எடுக்க முடியவில்லை. “ஐயோ.. காப்பாத்துங்க” என்ற அந்தச் சிறுவனின் மரண ஓலம் அங்கிருந்தவர்களைக் கண்ணீர் வடிக்க வைத்தது. சம்பவ இடத்திற்குப் புயலாக விரைந்து வந்த சைஃபாபாத் போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் கூட்டுப் போர்ப் பிரகடனமே நடத்தினார்கள்.

“>

இதனால் அதிநவீன இரும்பு வெட்டும் கருவிகள் கொண்டு வரப்பட்டன. சிறுவனுக்குக் காயம் பட்டுவிடக் கூடாது என்பதில் தீயணைப்பு வீரர்கள் காட்டிய நிதானமும், வேகம் தான் இந்த ஆபரேஷனின் திருப்புமுனை! சுமார் 30 நிமிடங்கள் மூச்சடைக்க வைக்கும் போராட்டத்திற்குப் பிறகு, ஒருவழியாக இரும்பு கம்பிகள் துண்டிக்கப்பட்டு, சிறுவனின் கால் பத்திரமாக மீட்கப்பட்டது.

இந்நிலையில் சுபமாக முடிந்த இந்தத் திக் திக் நிமிடங்களைக் கண்டு, அங்கிருந்த ஒட்டுமொத்த கூட்டமும் கைதட்டி, காக்கிச் சட்டைகளின் துரித நடவடிக்கையைக் கொண்டாடித் தீர்த்தனர். தற்போது இந்த மீட்புப் பணி வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.