ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளரான பாப்பையா என்பவர் பார்வதிபுரம் ஆர்டிசி சர்க்கிள் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஹெல்மெட் அணியாமல் உமா என்கிற மின் ஊழியர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்திய காவல் ஆய்வாளர் பாப்பையா அவருக்கு அபராதம் விதித்துள்ளார். இதனால் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டத்தில் கோபமடைந்த உமா அபராதம் விதித்த காரணத்தினால் காவல் உதவி மையத்தின் அருகே இருந்த மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் அப்பகுதி முழுவதிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை சரி செய்ததோடு மின் ஊழியர் உமாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.