பீகார் மாநிலத்தில் உள்ள ககாரியா என்ற பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நீரஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு ரூபி தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது 4 குழந்தைகள் இருக்கிறது. இந்நிலையில் ரூபி தேவிக்கு அப்பகுதியை சேர்ந்த முகேஷ் என்பவருடன் தவறான பழக்கம் ஏற்பட கடந்த 2022-ம் வருடம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து நீரஜ் போலீசில் புகார் கொடுத்திருந்தார். அதன் பிறகு கிராம பஞ்சாயத்தார் பலமுறை எச்சரித்தும் முகேஷ் ரூபி தேவியை விடுவதாக இல்லை.

இதற்கிடையில் ரூபி தேவியை திருமணம் செய்த முகேஷின் மனைவி பெயரும் ரூபி தான். முகேஷ் ரூபி தேவி திருமணம் செய்து கொண்டதால் அவருடைய மனைவி போலீசில் இது குறித்து புகார் தெரிவித்து இருந்தார். இப்படிப்பட்ட சூழலில் திடீரென நீரஜுக்கும் மற்றும் முகேஷின் மனைவி ரூபிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற கடந்த 18-ஆம் தேதி நீரஜ் மற்றும் ரூபி இருவரும் திருமணம் செய்துள்ளனர். மேலும் தன்னுடைய மனைவியை திருமணம் செய்த அதே நபரின் மனைவியை நீரஜ் திருமணம் செய்திருப்பது அப்பகுதியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.