உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் கேட்பதற்கே நடுக்கம் தரும் ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது. ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான 70 வயது ஹவுஸ்லா பிரசாத் என்பவரை, அவரது இரண்டாவது மனைவி சங்கீதா கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார். கணவன், மனைவி இருவருமே மதுபோதையில் இருந்தபோது அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற சங்கீதா, அங்கிருந்த கட்டையை எடுத்து பிரசாத்தின் தலையில் ஓங்கி ஓங்கி அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது.

​இந்தக் கொலை குறித்து ஹவுஸ்லா பிரசாத்தின் மகன் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த சங்கீதாவை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மதுபோதையும், கட்டுக்கடங்காத கோபமுமே ஒரு உயிரைப் பறிக்கும் அளவுக்குச் சென்றுள்ள இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வயதான முதியவர் தனது மனைவியாலேயே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பல விவாதங்களைக் கிளப்பியுள்ளது.