மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில், இம்ரான் கான் என்ற லாரி ஓட்டுநர், தனது சிறுவயதான மகனை தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஓட்ட அனுமதித்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, பொதுமக்களிடையே கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. வீடியோவில், லாரி ஸ்டீயரிங் அருகே சிறுவன் அமர்ந்து ஓட்டுவதும், தந்தை அருகில் உட்கார்ந்து அதை பார்ப்பதும் தெளிவாக காணப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து போலீசார் நடவடிக்கைக்கு முனைந்துள்ளனர். மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் இம்ரான் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட லாரியின் பதிவு எண் JK02DC8178 எனும் ஜம்மு & காஷ்மீர் ஆர்.டி.ஓவைச் சேர்ந்தது என்றும், இது தற்போது போக்குவரத்து காவல்துறையின் கவனத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற செயலைப்பற்றி மற்ற பெற்றோர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.