கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் பீட் வன அதிகாரியான அருண் பொன்முடி பகுதியில் உள்ள கோல்டன் வாலி செக் பாயிண்ட் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது, மின்சாரம் தாக்கி கீழே விழுந்து காயமடைந்த ஒரு குட்டி குரங்கை கண்டார்.

உடனே அந்த குரங்குக் குட்டியை தனது கையில் எடுத்து வைத்து CPR (Cardiopulmonary Resuscitation) எனப்படும் நுரையீரல் மற்றும் இதய இயக்கங்களை மீட்டெடுக்கும் முறையை செயல்படுத்தினார். சில நிமிடங்களுக்குள் அந்த குட்டி குரங்கு சுவாசிக்கத் தொடங்கியது. பின்னர் அது முழுமையாக சீராகி விழித்தது.

இதனையடுத்து அந்த குட்டி குரங்கை அருகிலுள்ள காட்டில் விட்டபோது, அந்தக் குட்டியின் தாய் குரங்கு ஓடி வந்து, தனது குட்டியைத் தழுவி அழைத்துச் சென்றது. இந்த காட்சி அருகில் இருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் வரவழைத்தது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அருணின் தைரியம், பாசமும் நிறைந்த செயலை மக்கள் மிகவும் பாராட்டி வருகின்றனர். ஒரு வன அதிகாரி தனது மனதிலிருந்து செய்த இந்த செயல், மனிதன் மற்றும் விலங்கு இடையேயான அன்பு, கருணையின் பிணைப்பை உணர்த்துகிறது.