கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில், ஜூனியர் மாணவி ஒருவரை சீனியர் மாணவிகள் கும்பலாகச் சேர்ந்து கொடூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு மாணவியை மற்ற மாணவிகள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக அறைவதும், தகாத வார்த்தைகளால் திட்டுவதும், அவரது குடும்ப கௌரவத்தைக் குறித்து அவதூறாகப் பேசுவதும் பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி எவ்வளவோ கெஞ்சியும் விடாமல் அவரைத் தாக்கி, வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் கல்வி நிலையங்களில் நிலவும் ராகிங் கொடுமையின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், இது சுமார் 10 நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாகப் பல்கலைக்கழக நிர்வாகம் ஒரு குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருவதோடு, சம்பந்தப்பட்ட மாணவிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

“>

 

ஆனால், வெறும் ஒழுங்கு நடவடிக்கை மட்டும் போதாது என்றும், ராகிங் என்ற பெயரில் நடக்கும் இத்தகைய வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

“படித்தவர்களே இப்படிச் செயல்பட்டால் எதிர்காலச் சமூகம் என்னவாகும்?” என்ற வேதனையான கேள்வியும் எழுந்துள்ளது.