உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள துளசி உத்யன் என்ற பொதுப் பூங்காவில், காவி உடை அணிந்த நான்கு நபர்கள் ஒரு இளம் ஜோடியைத் துரத்திச் சென்று கொடூரமாகத் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.

பூங்காவில் அமர்ந்திருந்த அந்த இளைஞரையும் பெண்ணையும் சூழ்ந்துகொண்ட அந்த நபர்கள், முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் அவர்களைக் கண்மூடித்தனமாக அடிக்கத் தொடங்கியுள்ளனர்.

தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அந்த ஜோடி பூங்காவின் வெளிவாயில் நோக்கி ஓடியபோதும், விடாமல் துரத்திய அந்த கும்பல் வெளியிலும் வைத்து அந்த இளைஞரைத் தாக்கியுள்ளது.

தனது காதலரை அடிக்க வேண்டாம் என்று அந்தப் பெண் தடுத்துக் கெஞ்சியபோதும், அவரையும் அந்த கும்பல் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளது. பொது இடத்தில் இந்த கொடூரம் நடந்தபோதும் அங்கிருந்த பொதுமக்கள் யாரும் தடுத்து நிறுத்தாமல், தங்களது மொபைல் போன்களில் வீடியோ மட்டுமே எடுத்துள்ளனர்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, லக்ஷ்மண் காட் காவல் துறையினர் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இந்த விவகாரத்தில் கோண்டா பகுதியைச் சேர்ந்த தர்மேந்திர தாஸ் மற்றும் குன்கேஷ் திவாரி ஆகிய இரண்டு சந்தேக நபர்களைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில், அந்த ஜோடி பூங்காவிற்குள் ‘அநாகரீகமாக’ நடந்துகொண்டதால் தான் தட்டி கேட்டதாகக் கைதானவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே, அயோத்தியின் முக்கிய மதத் தலைவர்கள் இந்த வன்முறைச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“>

 

அந்த ஜோடியின் செயல் தவறாக இருந்திருந்தால் அவர்களுக்குப் பொறுமையாக அறிவுரை கூறி அனுப்பியிருக்க வேண்டுமே தவிர, சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இப்படி கொடூரமாகத் தாக்கியது எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.