மகாராஷ்டிரா மாநிலத்தின் புகழ்பெற்ற மலைப்பாதையான மல்ஷேஜ் காட் சாலையில், கடந்த ஜூலை 24-ஆம் தேதியன்று ஒரு பிக்கப் வேன் ஓட்டுநர் கண்மூடித்தனமாகவும் கவனக்குறைவாகவும் வாகனத்தை இயக்கியது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பின்னால் வந்த காரின் டேஷ் கேமராவில் பதிவான இந்த அதிர்ச்சி வீடியோவில், குறுகிய மற்றும் வளைந்து நெளிந்து செல்லும் மலைச்சாலைகளில் அந்த வண்டி தாறுமாறாக ஓட்டப்படுவது தெளிவாகத் தெரிகிறது. கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் சாலையோரப் பள்ளம் மற்றும் சேற்றில் இறங்கி திடீரென நடுரோட்டிற்கு வந்தபோது, அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நூலிழையில் மரணத்தின் பிடியில் இருந்து தப்பினார்.

சாலையின் நடுவே மாறி மாறிச் சென்ற அந்த பிக்கப் வான், எதிரே வந்த வாகனங்களை மோதத் திரும்புவது போலவும், வளைவுகளில் பிற வாகனங்களை அபாயகரமான முறையில் முந்திச் செல்வதாகவும் அமைந்திருந்தது. இதனால் எதிரே வந்த மற்ற வாகன ஓட்டிகள் தங்கள் கார்களை அவசரமாக நிறுத்தவோ அல்லது ஓரமாக விலக்கவோ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எந்த ஒரு விதியையும் மதிக்காமல் தொடர்ச்சியாக மற்றவர்களின் உயிரைப் பணயம் வைத்து இந்த வாகனம் இயக்கப்பட்டதை அடுத்து, பின்னால் வந்த வாகன ஓட்டிகள் துணிச்சலாக அந்தப் பிக்கப் வாகனத்தைத் துரத்தத் தொடங்கினர். நீண்ட தூரத் துரத்தலுக்குப் பிறகு, இரண்டு மூன்று கார்களைக் கொண்டு சாலையை மறித்து அந்தப் பிக்கப் வாகனத்தை ஓட்டிகள் நைசாகத் தடுத்து நிறுத்தினர்.

வாகனம் நின்றவுடன் கோபமடைந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக ஓட்டுநரை நோக்கிச் சென்று வாக்குவாதம் செய்தனர். அப்போது அந்த டிரைவர்  உள்ளே அமர்ந்துகொண்டு சாவகாசமாகத் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தவர்கள் ஆத்திரமடைந்து அவரைத் தாக்கியதுடன், அவர்  தப்பியோடாமல் இருக்க உடனடியாக அதன் சாவியையும் பறிமுதல் செய்தனர். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த ரோந்துப் போலீஸ் வாகனம், நிலைமையைக் கைப்பற்றி அந்த ஓட்டுநரைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது. ஓட்டுநர் போதையில் வாகனம் ஓட்டியிருக்கலாம் என்று சம்பவ இடத்திலிருந்தவர்கள் சந்தேகம் வெளியிட்ட போதிலும், காவல்துறை தரப்பில் இது குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த விபரீதச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர் சேதமோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆபத்தான முறையில் ஓடிய வாகனத்தை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்திய வாகன ஓட்டிகளின் துணிச்சலை சமூக வலைதளங்களில் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். மலைச்சாலைகளில் விதிகளுக்குப் புறம்பாகப் பொதுமக்களின் பாதுகாப்பைக் குலைக்கும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருவதுடன், இது குறித்த விசாரணைகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.