ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி பகுதியில் சரோஜ் மாலிக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபிதா மாலிக் (35) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கூலி வேலைக்காக ஈரோட்டுக்கு வந்துள்ளனர். இதில் சபிதா ஒரு தனியார் லுங்கி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய கணவரிடம் சபிதா வெயில் அதிகமாக இருப்பதால் தனக்கு அடிக்கடி வயிற்று வலி வருவதாக கூறி சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் சில நாட்கள் கழித்து அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்.

இருப்பினும் வெயிலின் தாக்கத்தை சபிதாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் சம்பவ நாளில் சரோஜ் மாலிக் வீட்டிற்கு இரவு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது அவருடைய மனைவி தூக்கில் தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரோஜ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தன் மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சபிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சூரம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வெயில் கொடுமை தாங்காமல் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.