ஓசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு சாப்பிட வழங்கப்படும் இட்லி ரப்பர் போல் இருப்பதாகவும், அவை மூன்று நாட்களுக்கு கெட்டுப் போகாமல் அப்படியே இருப்பதாகவும் கூறி வாடிக்கையாளர்கள் உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சில மாதங்களாகவே இது போன்ற இட்லிகளை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இட்லிகளை சாப்பிடும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் எனக் கூறி அவர்கள் வாக்குவாதம் நடத்தியுள்ளனர்.

அப்போது ஹோட்டல் உரிமையாளர் கூறியதாவது,”தங்களுக்கு வேறு இடத்தில் இருந்து இட்லி குறைந்த விலைக்கு கிடைக்கிறது. அதனை நாங்கள் சட்னி, சாம்பாரோடு விற்பனை செய்து வருகின்றோம். ஆனால் இந்த இட்லியில் ஆமணக்கு விதை மட்டுமே கலக்கப்படுகிறது என அந்த ஹோட்டல் உரிமையாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது”. இருப்பினும் வாடிக்கையாளர்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடையில் இட்லி சாப்பிட வந்த வாடிக்கையாளர்கள் ஒருவர் கூறியதாவது, தொடர்ந்து இது போன்ற இட்லிகளை விற்பனை செய்து வருகின்றனர். ஓசூர் பகுதிகளில் ஏராளமான ஹோட்டல்களில் இது போன்ற ரப்பர் இட்லிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஹோட்டல்களில் விற்கப்படும் இட்லியின் தரம் பற்றி ஆய்வு செய்ய வேண்டும். இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம் என கூறியுள்ளார்.