தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொசு தொல்லை அதிகமாகி பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பிரச்சனை எழுந்துள்ளது. இந்த டெங்கு காய்ச்சலால் மதுரையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மதுரையில் உள்ள கோச்சடை வைகை விலாஸ் பகுதியை சேர்ந்தவர்கள் மகேந்திரன் – சத்யப்பிரியா தம்பதி.
மகேந்திரன் கப்பலில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சத்யபிரியா கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் வந்திருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு திடீரென உயிரிழந்தார். அதேபோன்று திருமங்கலம் பகுதியை சேர்ந்த ஓட்டுனர் கண்ணன் என்பவரது ஏழு மாத பெண் குழந்தை கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் திடீரென குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. காய்ச்சலால் அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் மதுரை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.