திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி டவுன் காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வந்த வாலிபர் திடீரென உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பது தெரியவந்தது. இவர் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பழனி காரமடை பகுதியில் இருக்கும் ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதனையடுத்து ஹோட்டல் நிர்வாகத்தினர் சம்பள பணத்தை தர மறுத்ததால் தீக்குளிக்க முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் போலீசார் ஹோட்டல் நிர்வாகத்தினரை வரவழைத்து பேசியதில் உடன்பாடு ஏற்பட்டது. பின்னர் இதுபோல தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது என போலீசார் ராஜமாணிக்கத்தை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.