திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்பாத்துறை காமாட்சி நகரில் நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியர் ஆவார். நேற்று முன்தினம் நம்பிராஜனின் வீட்டின் முகப்பு பகுதியில் ஓடுகளின் இடுக்கில் பாம்பு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நம்பிராஜன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அடுத்தடுத்து ஓடுகளின் இடுக்கில் இருந்த 6 கொம்பேறி மூக்கன் பாம்புகளை பத்திரமாக பிடித்தனர். ஒவ்வொரு பாம்பும் 3 முதல் 5 அடி வரை இருந்தது. இதனையடுத்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பாம்புகள் காட்டு பகுதியில் விடப்பட்டது. ஒரே வீட்டில் ஆறு பாம்புகள் பதுங்கி இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.