சென்னை மாவட்டத்தில் உள்ள காவாங்கரை சுபாஷ் சந்திர போஸ் தெருவில் ஆட்டோ டிரைவரான தீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு நிஷாந்தினி என்ற மகளும், சாய் பிரசாத் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தீபன் ஒரகடத்தில் இருக்கும் பெரியம்மா வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து பெரியம்மா வீட்டில் வளர்த்து வந்த நாய்க்குட்டியை தீபன் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் அம்பத்தூர்-செங்குன்றம் சாலையில் கள்ளிகுப்பம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளின் முன்புறம் இருந்த நாய்க்குட்டி நிலைதடுமாறியது. இதனால் தீபன் நாய்க்குட்டியை பிடிக்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவில் இருக்கும் தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தீபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீபனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.