திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டு கிராமத்தில் கௌதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர் சுனில் என்பவரை சிங்கப்பூருக்கு வழி அனுப்பி வைப்பதற்காக மற்றொரு நண்பரான ஆசை தம்பி உட்பட 4 பேருடன் காரில் குரோம்பேட்டைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சிங்கப்பூர் செல்லும் விமானத்திற்கு செல்ல அதிக நேரம் இருப்பதாக கூறி நண்பர்கள் 4 பேரும் கடற்கரைக்கு சென்றனர். இதனையடுத்து திருவல்லிக்கேணி இருந்து மின்சார ரயிலில் பூங்கா ரயில் நிலையம் சென்றுள்ளனர்.

அங்கிருந்து நான்கு பேரும் தாம்பரம் செல்லும் மின்சார ரயிலில் ஏறியுள்ளனர். இந்நிலையில் சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றபோது படிக்கட்டு அருகில் நின்று கொண்டிருந்த ஆசை தம்பி தவறி கீழே விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் சைதாப்பேட்டை நிலைய மேலாளருக்கு தகவல் கொடுக்க விரைந்தனர். இதற்கிடையே கெளதம் ஆசைத்தம்பியை காப்பாற்றுவதற்காக தண்டவாளத்தில் இறங்கி பின்னோக்கி ஓடிய போது தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆம்புலன்சை வரவழைத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதனை செய்து பார்த்து விட்டு கௌதம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையே காயமடைந்த ஆசைத்தம்பி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.