சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சக்திவேல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அதே நேரம் காங்கேயத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்றது. இந்நிலையில் மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே சென்றபோது தனியார் பேருந்து லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மனோகரன், வெங்கடேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த விஜயகுமார், ஹரிஷ், வினோத் உள்ளிட்ட 12 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மனோகரன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.