கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பி.என் புதூர் கட்டபொம்மன் வீதியில் நகை பட்டறை தொழிலாளியான ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எம்.எஸ்.சி பட்டதாரியான மதுமதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மதுமதியும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான ஒரு வாலிபரும் கடந்த 1 1/2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் காதலை கைவிடுமாறு தனது மகளை கண்டித்தனர். இதனால் மதுமதி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.

நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக பெற்றோருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் வீட்டிற்கு விரைந்து வந்து மயங்கி கிடந்த தங்களது மகளை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதுமதி பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.