புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொசுவபட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்மிளாவின் தாய் இறந்து விட்டார். அதன் பிறகு சக்திவேல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட சர்மிளா பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு சென்னையில் இருக்கும் செல்போன் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் விடுமுறை நாட்களில் சர்மிளா சொந்த ஊரில் இருக்கும் தாய்மாமன் பிரபு வீட்டிற்கு வந்து செல்வார். அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்மிளா பிரபு வீட்டிற்கு வந்து சில நாட்கள் தங்கி இருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரபுவின் மைத்துனர் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பிரபு தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் நாட்டாணிக்கு சென்றார்.

இதனையடுத்து பிரபு வீடு திரும்பிய நிலையில் சர்மிளா தனது தாய் மாமாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறினார். அப்போது பிரபு பக்கத்து வீட்டில் வசிக்கும் கருப்பு சாமியுடன் மது அருந்திவிட்டேன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனால் பிரபு கருப்புசாமி இடம் மோட்டார் சைக்கிளை கொடுத்து தனது தங்கை மகளை அழைத்து வா என கூறினார்.

அதன்படி கருப்புசாமி சர்மிளாவை அழைத்துக் கொண்டு தச்சான்குறிச்சிக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சென்னம்பட்டி காட்டுப் பகுதியில் வைத்து மதுபோதையில் சர்மிளாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சர்மிளா தன்னை போலீசில் காட்டி கொடுத்து விடுவார் என நினைத்து துப்பட்டாவால் சர்மிளாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் சர்மிளா வராததால் சந்தேகம் அடைந்த பிரபு கருப்பு சாமியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது கருப்புசாமி தன்னையும், சர்மிளாவையும் ஒரு கும்பல் தாக்கிவிட்டு காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்றதாக தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பிரபு காட்டுப்பகுதிக்கு சென்று பார்த்தபோது சர்மிளா கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு கதறி அழுதார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சர்மிளாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கருப்புசாமியை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் நடந்தவற்றை ஒப்புக்கொண்டார் அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.