அரியலூர் மாவட்டத்தில் உள்ள வேள்வி மங்கலம் கிராமத்தில் கௌசல்யா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கௌசல்யாவுக்கு கடலூரைச் சேர்ந்த ராஜாராம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த 2- ஆம் தேதி கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கௌசல்யா தூக்கிட்டு தற்கொலை செய்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கௌசல்யா உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று கௌசல்யாவின் உடலை அவரது உறவினர்கள் ராஜாராமின் வீட்டிற்கு முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி கௌசல்யாவை கொன்று விட்டதாகவும், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கோஷம் எழுப்பியுள்ளனர். பின்னர் வீட்டுக்குள் நுழைந்து டிவி, மின்விசிறி, கியாஸ் அடுப்பு உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் கௌசல்யாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.