சேலம் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் புதூர் கிராமத்தில் கட்டிட வேலை பார்க்கும் அருள்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அருள் முருகனுக்கும் சமத்துவபுரத்தைச் சேர்ந்த அபிராமி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. நேற்று கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த அபிராமி தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மாணிக்கம் என்பவரது விவசாய கிணற்றில் குதித்தார்.

இதனை பார்த்த அருள் முருகன் தனது மனைவியை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக இரண்டு பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.