சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணகி நகர் முக்கியம் துரைப்பாக்கத்தில் அபினேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அபினேஷ் மயிலாப்பூர் பி.என் தோட்டம் அருகே இருக்கும் மாமா வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அபினேஷ் மாமா மகன் மணிகண்டனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் வசீகரன், அவரது நண்பர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். இதனை பார்த்த மணிகண்டன் ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள்? என தட்டிக் கேட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அவர்களை அக்கம் பக்கத்தினர் சமரசப்படுத்தினர். இந்நிலையில் நேற்று அதிகாலை வசீகரனும் அவரது நண்பர்களும் மணிகண்டனை தேடி அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு அபினேஷ் மட்டுமே இருந்தார். அவரிடம் வசீகரனும் அவரது நண்பர்களும் மீண்டும் தகராறு செய்து கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர். இதனால் காயமடைந்த அபினேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வசீகரன், பிரவீன், சதீஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.