தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நீலாபுரம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகேஷ்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முகேஷ் தனது குடும்பத்தினருடன் தாத்தாவின் 3- ஆம் மாத இறப்பு காரியத்திற்காக ஒகேனக்கலுக்கு சென்று ஏத்தமடுவு காவேரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் முகேஷ் தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் முகேஷை காப்பாற்ற முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முகேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.