புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நரிமேடு பெரியார் சமத்துவபுரம் பகுதியில் முகமது என்பவர் வசித்து வருகிறார். நேற்று முகமதுவும் அவரது நண்பர் அபுதாஹிரும் மோட்டார் சைக்கிளில் ராயவரத்தில் இருக்கும் நண்பரை பார்த்து விட்டு மீண்டும் புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் முனசந்தை விலக்கு ரோடு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற மரத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முகமது பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.