புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டினத்தில் மீனவரான வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் பிரேம்குமார் சிவகங்கை மாவட்டத்தில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து வேல்முருகன் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்தார். நேற்று முன்தினம் இரவு வேல்முருகன் தனது மனைவியுடன் குடிபோதையில் தகராறு செய்த போது பிரேம்குமார் தனது தந்தையை தட்டி கேட்டார்.

அப்போது தந்தைக்கும், மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த பிரேம் குமார் கத்தியால் தனது தந்தையை சரமாரியாக குத்தினார். இதனால் படுகாயமடைந்த வேல்முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பிரேம்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.