இந்தியாவில் ஆன்மீகச் சுற்றுலாவுக்காக இயக்கப்படும் ‘பாரத் கௌரவ்’ சுற்றுலா ரயில் ஒன்றில், பயணிகள் சிலர் ஓடும் ரயிலுக்குள்ளேயே பஜனை செய்து, ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்திய வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், ரயிலின் மேல் படுக்கை ஒன்றை சிறிய கோவில் போல அலங்கரித்து, தெய்வ சிலைகளை வைத்து, மாலைகள் அணிவித்து பயணிகள் தீவிரமாக வழிபாடு நடத்துகின்றனர்.

 

ஒருபுறம் பக்திப் பாடல்கள் ஒலிக்க, மற்றொருபுறம் பயணிகள் கூடி நின்று ஆரத்தி எடுக்கும் இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பக்தியின் வெளிப்பாடாக இதைச் சிலர் ஆதரித்தாலும், பொது இடத்தில் இது போன்ற செயல்கள் மற்ற பயணிகளுக்கு இடையூறாக அமையும் என மற்றொரு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, ரயிலின் குறுகிய நடைபாதையில் இதுபோலக் கூட்டம் சேருவது மற்றும் அலங்காரப் பொருட்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பு ரீதியாகப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனப் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். “ரயிலில் அமைதியாகப் பயணம் செய்யவே டிக்கெட் வாங்குகிறோம்.

இது போன்ற மதச் சடங்குகளில் தர்மசங்கடமாகப் பங்கேற்க அல்ல” எனப் பயணிகள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ரயில்வே விதிகளின்படி மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பதோ, பாதைகளை மறிப்பதோ தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் பொது வெளியில் மத சுதந்திரத்திற்கும், பொது ஒழுங்கிற்கும் இடையிலான எல்லையைப் பற்றிய புதிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது.