சமூக வலைதளங்களில் பொது இடங்களின் அவலங்கள் குறித்த காணொளிகள் அதிகம் பகிரப்படும் நிலையில், மிசோரம் மாநிலத்திலிருந்து வந்துள்ள ஒரு காணொளி பொதுமக்களின் பொறுப்புணர்விற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. ஐசாவலில் இருந்து குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணித்த பயணிகள், ரயில் பெட்டிகளைத் தங்கள் வீட்டைப் போலத் தூய்மையாகப் பராமரிக்கும் விதம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
ரயில்வே நிர்வாகத்தின் எந்தவொரு கட்டாயமும் அல்லது அபராதமும் இன்றி, பயணிகள் தாங்கள் பயன்படுத்திய குப்பைகளைச் சிறிய பைகளில் சேகரித்துத் தங்கள் இருக்கைகளுக்கு அருகிலேயே தொங்கவிட்டு பெட்டியில் குப்பைகள் சிதறாமல் பார்த்துக் கொள்கின்றனர்.
வடகிழக்கு இந்திய மக்களின் இந்த உயரிய கலாச்சாரம் மற்றும் பொது இடங்களைப் பாதுகாக்கும் பண்பு பாராட்டுக்களைப் பெற்று வரும் அதே வேளையில், தூய்மை என்பது வெறும் சட்டங்களால் மட்டும் வராது, அது ஒவ்வொரு குடிமகனின் பழக்கவழக்கத்திலிருந்தே பிறக்கும் என்பதை இந்தச் சம்பவம் உலகிற்கு உணர்த்தியுள்ளது.
