திருச்சி மாவட்டத்தில் உள்ள தும்பலம் பெருமாள் பாளையத்தில் கலையரசி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கலையரசிக்கு ராஜசேகரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ராஜசேகர் மூன்று மாதத்திற்கு முன்பு தன் மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து கலையரசி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் புகாரை வாங்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தன்னை அலட்சியப்படுத்தும் போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கலையரசி காவல் நிலைய நுழைவு வாயில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். அவரிடம் சப்- இன்ஸ்பெக்டர் லதா பேச்சுவார்த்தை நடத்தி வழக்குபதிவு செய்வதாக கூறினார். அதன் பிறகு கலையரசி தர்ணாவை கைவிட்டார். இதனை தொடர்ந்து ராஜசேகர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.