தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கழுகு புலி காடு கிராமத்தில் ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து பாத்திமா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜேம்சை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். இதனையடுத்து சிறையில் இருந்த கணவரை ஜாமீனில் எடுக்க பாத்திமா எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஜேம்ஸின் தாய் ஆரோக்கிய மேரி தனது மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்துள்ளார்.

இதனை கேள்விப்பட்ட பாத்திமா தனது மாமியாரிடம் சென்று அவரை வெளியே எடுத்தால் என்னை கொலை செய்து விடுவார் என கூறி தடுத்துள்ளார். அதைக் கேட்காமல் ஆரோக்கியமேரி தனது மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த பாத்திமா தனது மாமியாரை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த ஆரோக்கிய மேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று ஆரோக்கிய மேரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.