திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஜெருசலேம் தர்மா நகர் தெற்கு தெருவில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜான் பால் மணிமுத்தாறில் இருக்கும் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நான்காம் தேதி ஜான் பால் மோட்டார் சைக்கிளில் மணிமுத்தாறு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பிரான்சேரி பகுதியில் சென்ற போது சாலையின் குறுக்கே வந்த நபர் மீது மோதாமல் இருக்க ஜான்பால் பிரேக் பிடித்தார்.

இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜான்பால் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.