கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டி புது காலனியில் ஆறுமுகம்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டிங் தொழிலாளி. இவரது மனைவி கற்பகம்(33) பல் ஸ்கேன் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண், ஒரு ஆண் என மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.

கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஆறுமுகம் தனது மனைவியை பிரிந்து பல்லடத்தில் இருக்கும் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து ஆறுமுகம் தனது மனைவியை சந்தித்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கேட்டுள்ளார். அதற்கு கற்பகம் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் ஆறுமுகம் தனது மனைவியிடம் குடும்பம் நடத்த வருமாறு கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

ஒரு கட்டத்தில் ஆறுமுகம் கத்தியால் தனது மனைவியை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் படுகாயமடைந்த கற்பகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று கற்பகத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.