கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது மகனுடன் வந்த பெண் திடீரென மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் கண்டாரக் கொட்டையை சேர்ந்த பரமேஸ்வரி என்பது தெரியவந்தது. அவர் கூறியதாவது, எனது கணவர் முத்துக்குமரன் என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். உடல் நல குறைவு காரணமாக அவர் இறந்து விட்டார்.

நானும் எனது எட்டு வயது மகனும் முத்துக்குமரன் வீட்டில் இருக்கிறோம். எங்களுக்கு சரியான முறையில் உணவு, மகனின் படிப்பு செலவுக்கு பணம் வழங்காமல் அவரது குடும்பத்தினர் துன்புறுத்துகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. தினந்தோறும் என்னை சித்திரவதை செய்கின்றனர். எனது தாயார் வீட்டிலும் எனக்கு ஆதரவு கிடையாது. இதனால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய வருகின்றனர்.