பாஜக கட்சியின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில வளர்ச்சி தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் பாஜக கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அண்ணாமலை அவரை ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்தார். இருப்பினும் காயத்ரி ரகுராம் கட்சிக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வந்தார். ஆனால் அண்ணாமலையை விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் காயத்ரி ரகுராம் பாஜக கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை நேற்று வெளியிட்டார். இது பாஜக கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காயத்ரி ரகுராம் அண்ணாமலை மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அவர் கூறியதாவது கனத்த இதயத்துடன் நான் பாஜகவில் இருந்து விலக நான் முடிவு செய்துள்ளேன். அண்ணாமலையின் தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. உண்மை தொண்டர்களுக்கு பாஜகவில் மதிப்பு இல்லை.

அண்ணாமலைக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே மதிப்பு கொடுக்கப்படுகிறது. அண்ணாமலை மலிவான பொய் பேசி அதர்மத்தின் பக்கம் நிற்கும் தலைவர். நான் பாஜகவில் இருந்து விலகுவதற்கு அவர்தான் காரணம். என்னால் அண்ணாமலையின் தலைமையின் கீழ் இருக்க முடியாது. பெண்களே உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மரியாதை இல்லாத இடத்தில் பெண்கள் தொடர்ந்து இருக்க கூடாது. என்னிடம் இருக்கும் ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை போலீசாரிடம் வழங்கி அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என புகார் கொடுக்கப் போகிறேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, பாஜகவில் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளை களைவதற்கு ஒரு உள் அமைப்பு இருக்கிறது. டுவிட்டரில் தெரிவித்தால் நியாயம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். பிரச்சினையை காயத்ரி அணுகிய முறை தவறு. மாநில தலைவருடன் பிரச்சினை என்றால் என்னை அணுகி புகார் தெரிவித்து இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை என்று கூறியுள்ளார்.