ஓ.பி.எஸ் அணி சார்பில் தொடங்கப்பட்ட”நமது புரட்சித் தொண்டன்”புதிய நாளிதழ்  வெளியீட்டு விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், இரண்டாம் தர்மயுத்தத்தை நாம் ஆரம்பித்து ஓராண்டுக்கு மேலாக… படிப்படியாக… படிப்படியாக தன்னுடைய பரிணாம வளர்ச்சியில் நிறைவு செய்து, கழகத்தினுடைய தொண்டர்கள் மட்டுமல்லாமல் இன்றைக்கு தமிழகத்தினுடைய ஒட்டுமொத்த மக்களுடைய ஆதரவினையும்,  அவருடைய கவனத்தை ஈர்க்கின்ற வகையில் நாம் பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

தொண்டருடைய ஆதரவையும் , தமிழக மக்களுடைய பேராதரையும் அவருடைய அன்பையும் பெறுவதற்கு மூல காரணமாக இருப்பது நாம் நீதியின் பக்கம், தர்மத்தின் பக்கம், நியாயத்தின் பக்கம் நிற்பது. எந்த நிலையிலும்  கழகத்தில் நம்பிக்கை துரோகிகளுக்கு ஒரு புரட்சித் தொண்டனாக இருந்து,  நாம் பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்பதனை தமிழக மக்கள் அவர்களுடைய உள்ளங்களில் ஆழமாக பதிந்த காரணத்தால் இன்றைக்கு நாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் மட்டும் இல்லாமல்,  தமிழக மக்களுடைய மனங்களிலும் நிரந்தரமாக இருக்கின்றோம்.

ஒரு வருட காலமாக  நமக்கென்று ஒரு பத்திரிக்கை வேண்டும். நாளிதழ் வேண்டும் என்று நம்முடைய அன்பு  கழக உடன்பிறப்புகள் கோரிக்கை வைத்த வண்ணம்  இருந்தார்கள். தொண்டர்களும் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தார்கள். உங்களுடைய கோரிக்கையை ஏற்று தான் இன்றைக்கு இந்த நமது புரட்சி தொண்டன் என்ற நாளிதழ்  உங்களால் உருவாக்கப்பட்டு,  அந்த நாளிதழ் முழு பரிணாம வளர்ச்சி அடைவதற்கு,  அதனுடைய ஆசிரியராக நம்முடைய அருமை அண்ணன் மருது அழகுராஜ் அவர்கள்  பொறுப்பினை ஏற்று இருக்கிறார்கள் என தெரிவித்தார்.