தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழவாசல் கவாஸ்காரர் தெருவில் சிவகுருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் மாமனார் சுந்தரம், மாமியார் கமலம் வசித்து வருகின்றனர். மாடியில் சிவகுருநாதன் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இன்று காலை சிவகுருநாதனின் மனைவி புவனேஸ்வரி வாஷிங் மிஷினில் துணியை போட்டு நடை பயிற்சிக்காக வெளியே சென்றார். சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வாஷிங் மெஷின் வெடித்து எரிய ஆரம்பித்தது.

இதனால் திடுக்கிட்டு எழுந்த சிவகுருநாதன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் சோபா, டிவி, கட்டில், மெத்தை உள்ளிட்டவை எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக வாஷிங் மெஷின் வெடித்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.