பீகாரில் காதலனுக்காக ஒட்டுமொத்த கிராமத்தையும் இளம் பெண் ஒருவர் இருளில் மூழ்கச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய காலத்தில் இளைஞர்கள் பலரும் தங்களது காதலன் அல்லது காதலியை சந்திப்பதற்காக அவர்களை கவர்வதற்காக பல விசித்திரமான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பலர் சில ஆபத்தான செயல்களிலும் ஈடுபடுவதும்  உண்டு. அந்தவகையில், பீகாரில் ஒரு காதல் ஜோடி தாங்கள் சந்திப்பதற்காக ஒரு கிராமத்தையே இருளில் மூழ்கடித்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் வடக்கு சம்புரான் கிராமப் பகுதியைச் சேர்ந்த ப்ரீத்தி என்னும் இளம்பெண், ராஜ்குமார் என்னும் இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் அவ்வபோது இரவு நேரங்களில் தொடர்ச்சியாக சந்தித்து வந்துள்ளனர். ஊர் மக்கள் கண்ணில் தென்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு சந்திப்பின் போதும் ஒட்டுமொத்த கிராமத்திற்குமான மின்சாரத்தை தொடர்ச்சியாக துண்டித்தார் ப்ரீத்தி. கிராம மக்களும் ஏன் மின்தடை ஏற்படுகிறது என செய்வதறியாமல் மின்வாரியத்தினரிடம் புகார் அளிக்க,

அதில் எந்த பயனும் கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக மின்தடை அரங்கேற பல திருட்டு சம்பவங்கள் கிராமத்தில் நிகழத் தொடங்கின. இதையடுத்து மின்வெட்டுக்கான காரணத்தை நாம் தான் கண்டறிந்தாக வேண்டுமென  கிராம மக்கள் பிரச்சனைக்கான தீர்வை கண்டறிவதில் தீவிரம் காட்டிய நிலையில், மின் துண்டிப்பு மீண்டும் ஏற்பட இரண்டு காதல் ஜோடிகளும் கிராம மக்களிடம் சிக்கிக்கொண்டனர். பின் சம்பந்தப்பட்ட இளைஞருக்கு கிராம மக்கள் தர்ம அடி கொடுக்க, அடி வாங்கும் காதலனை காப்பாற்ற  இளம் பெண் முயற்சிக்கும் காட்சியும் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.