ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகர் தேவன் கோட்டை ஊராட்சி அண்ணாமலை கிராமத்தில் சுரேஷ்(42) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ், அதே பகுதியில் வசிக்கும் கணேஷ் பிரபு(40), கண்ணன்(40), பிரபாகரன்(40), பதினெட்டான்(49) ஆகியோர் இரவு நேரம் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே இருக்கும் கணேஷ் மஹால் எதிரே பாலத்தின் தடுப்பு சுவரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பாலத்தில் மோதியது. இதனால் பாலத்தில் அமர்ந்திருந்த ஐந்து பேரின் கால்களும் முறிந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வேன் டிரைவரான குருசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.