பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடித்த பதான் திரைப்படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஷாருக்கானின் வீட்டில் அத்துமீறி இருவர் சுவர் ஏறி குதித்துள்ளனர்.

இதைப்பார்த்த பாதுகாவலர்கள் உடனடியாக அவர்கள் இருவரையும் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்றும் நடிகர் ஷாருக்கானின் தீவிர ரசிகர்கள் என்றும் கூறியுள்ளனர். மேலும் ரசிகர்களாக இருப்பினும் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த காரணத்திற்காக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.