அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  X தளத்தில் அக்கட்சியினரோடு கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்துப் போட்டியிடும். அண்ணா திமுகவோடு  கூட்டணி அமைக்கும் கட்சிகளோடு போட்டியிடும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

அதோடு தமிழக மக்களின் உரிமையை காக்கவும், தமிழக மக்களுக்கு புதிய திட்டங்களை மத்தியில் பெறுவதற்கும்,  தமிழகத்திற்கு திட்டங்களுக்கு தேவையான நிதியை பெறுவதற்கும், தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் உடைமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதை தான் நாங்கள் முன்னிறுத்தி வருகின்ற தேர்தலில் முழங்குவோம் என்பதையும் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.

இன்றைய முதலமைச்சரை பார்க்கின்றபோது கோமாளித்தனமாக தலைகீழாகத்தான் குதிப்பேன் என்று கவுண்டமணி நகைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் சரி,  2026 சட்டமன்ற தேர்தலிலும் சரி இந்த விடியா திமுக அரசை வீட்டிற்கு அனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்

இந்த விடியா திமுக அரசின் அவலங்களை ஒன்று விடாமல் மக்களிடத்தில் நாம் சென்று தோலுரிக்க வேண்டும். ஊரு ஊராக… வீதி வீதியாக… வீடு வீடாக… சென்று இந்த திமுக அரசின் பொய் மூட்டைகளை அவிழ்த்து…. மக்களிடையே இந்த அரசின் அவலங்களை  தோலுரித்து அம்பலப்படுத்த வேண்டும். அன்று  அம்மா அவர்கள் உங்களிடம் கேட்டதை….  இன்று கழகப் பொதுச் செயலாளராக என்ற முறையில் நான் மீண்டும் கேட்கின்றேன்…

கூட்டணியை நான் பார்த்துக் கொள்கின்றேன். ஜனநாயக முறைப்படி தீய சக்தியை அகற்றும் பணியை நீங்கள் செய்ய வேண்டும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு செல்லும் இடமெல்லாம் வெற்றி மீது வெற்றி வந்து சேரும் விதமாக களப்பணி ஆற்ற வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கின்றேன்.  செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா ?

நீங்கள் செய்வீர்கள் என்று நம்பிக்கையோடு,  நாளையும் நமதே நாற்பதும், நமதே,  தமிழ்நாடு நமது என்று கூறி விடைபெறுகிறேன் என பேசி முடித்தார். செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா என முன்னாள் அதிமுக பொதுச்செயலாளரும், மறந்த தமிழக முதல்வருமான ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்திய வார்த்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.